காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு


காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:24 PM GMT (Updated: 13 Aug 2019 11:24 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெறும் என்று காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் நேற்று அறிவித்தன. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவது இது 2-வது முறையாகும். ஏற்கவே 1998-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஆண்கள் 50 ஓவர் கிரிக்கெட் முதல்முறையாக இடம் பெற்று இருந்தது.

இது குறித்து காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன தலைவர் டாமி லூயிஸ் மார்ட்டின் கூறுகையில், ‘இன்று (நேற்று) வரலாற்று சிறப்பு மிக்க நாள். காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் மீண்டும் திரும்புவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்’ என்றார். இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல் அதிகாரி மானு சாவ்னி கூறுகையில் ‘உண்மையிலேயே இது பெண்கள் கிரிக்கெட்டுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும். சர்வதேச கிரிக்கெட் உலகினர் இந்த போட்டியை சேர்க்க ஒருங்கிணைந்த ஆதரவை அளித்தனர்’ என்று குறிப்பிட்டார். இந்த காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலுக்கு இடம் இல்லை என்று டாமி லூயிஸ் மார்ட்டின் மீண்டும் தெரிவித்துள்ளார்.

Next Story