ஸ்பாட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் வாழ்நாள் தடை 7 ஆண்டாக குறைப்பு; அடுத்த ஆண்டு விளையாடலாம்


ஸ்பாட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் வாழ்நாள் தடை 7 ஆண்டாக குறைப்பு; அடுத்த ஆண்டு விளையாடலாம்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:52 AM GMT (Updated: 20 Aug 2019 8:39 PM GMT)

‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் வாழ் நாள் தடை 7 ஆண்டாக குறைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு விளையாடலாம் என முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் கூறி உள்ளார்.

புதுடெல்லி,

2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆயுட்கால தடை விதித்தது. இந்த தடையை கேரள ஐகோர்ட்டு தனி நீதிபதி ரத்து செய்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ‘கடினமான தண்டனையான ஆயுட்கால தடையை எல்லா வழக்குகளிலும் அமல்படுத்தக்கூடாது. ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை ரத்து செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி 3 மாத காலத்துக்குள் ஸ்ரீசாந்திடம் விசாரணை நடத்தி அவரது தண்டனையின் அளவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம்  சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்ரீசாந்தின் தண்டனை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் 3 மாத காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

 இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி ஜெயின் ஸ்ரீசாந்த் தடை குறித்து தனது தீர்ப்பில்  கூறி இருப்பதாவது:-

ஸ்ரீசாந்த் எந்தவொரு வணிக கிரிக்கெட்டிலும் பங்கேற்கவோ அல்லது பி.சி.சி.ஐ. அல்லது அதன் துணை நிறுவனங்களின் எந்தவொரு நடவடிக்கைகளுடனும் தொடர்பு கொள்ளவோ விதித்திருந்த தடை 13.09.2013 முதல் அமல்படுத்தப்பட்ட ஏழு ஆண்டுகள் ஆகும். அதாவது, (ஒழுங்காற்றுக் குழுவால் விதிக்கப்பட்ட தடை காலம் தொடங்கிய தேதியில் இருந்து) நீதி முடிவடைகிறது.  அவரது வாழ்நாள் தடை  ஏழு வருட இடைக்கால தடையாக மாற்றப்படுகிறது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ( 07-08-2020)  முதல் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் விளையாடலாம் என கூறி உள்ளார்.

ஸ்ரீசாந்த், 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

Next Story