அணியின் நலன் கருதி வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் - கேப்டன் விராட்கோலி பேட்டி


அணியின் நலன் கருதி வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் - கேப்டன் விராட்கோலி பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2019 11:51 PM GMT (Updated: 26 Aug 2019 11:51 PM GMT)

இந்திய அணியின் நலனை மனதில் கொண்டு தான் ஆடும் லெவன் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

ஆன்டிகுவா,

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் கூட்டாக கலந்து பேசி அணிக்கு எது நல்லது என்பதை மனதில் கொண்டு தான் ஆடும் லெவன் அணியை முடிவு செய்கிறோம். ஆடும் லெவன் அணி குறித்து எப்பொழுதும் கருத்து இருக்க தான் செய்யும். ஆனால் அணியின் நலன் கருதியே யார் களம் இறங்குவது என்பதை முடிவு செய்கிறோம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அணியில் வீரர்கள் கலவை முக்கியமானதாகும். நல்ல பகுதிநேர பவுலர் என்பதால் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பும்ராவின் பணிச்சுமையை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். இதனால் தான் உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் ஒருநாள் போட்டி எதிலும் விளையாடவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் நீண்ட நாட்கள் விளையாட வேண்டியது இருக்கிறது. இதனால் பவுலர்களின் பணிச்சுமையை சரியாக கையாள வேண்டும். ரஹானே இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக செயல்பட்டார். லோகேஷ் ராகுல், ஹனுமா விஹாரி ஆகியோரும் நன்றாக ஆடினார்கள். இந்த போட்டியில் இரண்டு மூன்று முறை சரிவில் இருந்து மீண்டு வந்தது நல்ல அம்சமாகும்.

நான் எடுக்கும் முடிவை அணியினர் சரியாக அமல்படுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. முடிவை சரியாக செயல்படுத்த எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். அணியினரின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாடுகளே வெற்றிக்கு காரணமாகும். அடுத்த டெஸ்ட் போட்டியிலும் எங்களது தொழில்முறை ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

10-வது சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில், ‘30 இன்னிங்சுக்கு பிறகு சதம் அடித்து இருக்கிறேன். இந்த சதத்தை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். கடினமான தருணங்களில் எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு இந்த சதத்தை சமர்ப்பிக்கிறேன். முதல் இன்னிங்சில் நானும், லோகேஷ் ராகுலும் இணைந்து ஆடிய ஆட்டம் முக்கியமானதாகும். முதல் நாளில் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. அந்த நேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியினர் சிறப்பாக பந்து வீசினார்கள். ரன்னை பற்றி சிந்திக்காமல் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினோம். நிலைத்து நின்று ஆடினால் ரன் வரும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்று கூறினார்.


Next Story