இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் மார்க்ராம் சதம்


இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் மார்க்ராம் சதம்
x
தினத்தந்தி 27 Sep 2019 10:59 PM GMT (Updated: 27 Sep 2019 10:59 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா வீரர் மார்க்ராம் சதம் விளாசினார்.

விஜயநகரம்,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன்- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. பலத்த மழையால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாளான நேற்று ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய எய்டன் மார்க்ராம் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 100 ரன்களை (118 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) கடந்ததும் பின்வரிசை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி வெளியேறினார். மறுமுனையில் டீன் எல்கர் (6 ரன்), டி புருன் (6 ரன்), ஜூபைர் ஹம்சா (22 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (9 ரன், 29 பந்து) கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்துள்ளது. டெம்பா பவுமா 55 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய லெவன் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தர்மேந்திரசிங் ஜடேஜா 2 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், இஷன் போரெல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Next Story