இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை அதிகாரபூர்வ அறிவிப்பு


இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 9:56 PM GMT (Updated: 10 Oct 2019 9:56 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை அதிகாரபூர்வ அறிவிப்பு. இதில் யார் யார் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் அதிகாரி கோபால்சாமி வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகிக்கும் மாநிலம், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசு விளையாட்டு அமைப்புகள் என்று மொத்தம் 38 கிரிக்கெட் சங்கங்களின் உறுப்பினர்களில் 8 சங்கங்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது மணிப்பூர், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, அரியானா, மராட்டியம், ரெயில்வே, சர்வீசஸ், அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் ஆகிய கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுபோடும் உரிமையை இழக்கிறது. இதில் சர்வீசஸ், ரெயில்வே, பல்கலைக்கழகம் ஆகியவை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தை தொடங்காததாலும், மற்ற மாநிலங்கள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைக்குட்பட்டு மாநில நிர்வாகிகள் தேர்தலை நடத்தாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து மாநில கிரிக்கெட் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story