தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்


தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:53 AM GMT (Updated: 16 Oct 2019 10:53 AM GMT)

தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... என்று ரசிகருக்கு ட்விட்டரில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தமிழில் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சச்சின் தெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. நன்றி சாம்பியன் என ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ரசிகர் ஒருவர், மிதாலிக்குத் தமிழ் தெரியாது, அவர் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பேசுவார் என்றார்.

இதனால் கடுப்பான மிதாலி தனது அடுத்த ட்வீட்டை தமிழிலேயே வெளியிட்டார். தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று தமிழில் எழுதினார்.

பிறகு ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது:- ஆனால், அதைவிடவும் பெருமைக்குரிய இந்தியன் நான். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் விமரிசிக்கும் ரசிகரே, நான் தினமும் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்துவதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்றார்.

36 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 20-ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளாா். கடந்த மாதம் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். சா்வதேச கிரிக்கெட்டில் 20  ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அயா்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானாா் மிதாலி ராஜ். இதுவரை 204 போட்டிகளில்  விளையாடியுள்ள ஒரே இந்திய வீராங்கனையும் மிதாலி ராஜ் மட்டுமே.


Next Story