விராட்கோலியின் உடல் தகுதியும், மனவலிமையும் பார்க்க வியப்பாக உள்ளது - பிரையன் லாரா


விராட்கோலியின் உடல் தகுதியும், மனவலிமையும் பார்க்க வியப்பாக உள்ளது - பிரையன் லாரா
x
தினத்தந்தி 16 Dec 2019 11:05 PM GMT (Updated: 16 Dec 2019 11:05 PM GMT)

விராட்கோலியின் உடல் தகுதியும், மனவலிமையும் பார்க்க வியப்பாக உள்ளதாக, பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.


* வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பிரையன் லாரா அளித்த ஒரு பேட்டியில், ‘விராட்கோலியின் பேட்டிங் திறமை நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. அவர் ஆட்டத்தில் தீவிரமான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். கால்பந்து ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறாரோ? அதற்கு நிகராக கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விராட்கோலியின் செயல்பாடு இருக்கிறது. அவரது உடல் தகுதியும், மனவலிமையும் பார்க்க வியப்பாக உள்ளது. உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் இந்த சீசனில் ஆஷஸ் போட்டி தொடரில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆடிய விதம் பாராட்டுக்குரிய விஷயமாகும்’ என்று தெரிவித்தார்.

* சூதாட்டத்தில் 135-க்கும் மேற்பட்ட டென்னிஸ் வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இதில் டாப்-30 வரிசையில் இடம் பெற்றுள்ள வீரர் ஒருவரும் அடங்குவார் என்று ஜெர்மனியில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருக்கிறது. அர்மேனியா சூதாட்ட கும்பலுடன் இணைந்து வீரர்கள் செயல்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக கவுகாத்தியில் கடந்த வாரம் நடக்க இருந்த ஐ.எஸ்.எல். கால்பந்து ஆட்டம் மற்றும் ரஞ்சி கிரிக்கெட் போட்டி ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கவுகாத்தியில் நாளை (புதன்கிழமை) நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)- பெங்களூரு எப்.சி. அணியிலான கால்பந்து லீக் ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் அணி வீரர்கள் இன்று கவுகாத்தி செல்ல இருப்பதாக பெங்களூரு எப்.சி. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேச அணிகள் (பி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோல்வி கண்டு இருந்தது. இமாச்சலபிரதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவிடம் வீழ்ந்து இருந்தது.


Next Story