இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி வெற்றி


இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 11 Feb 2020 12:38 PM GMT (Updated: 11 Feb 2020 12:38 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

மவுன்ட்மாங்கானு,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்று விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரார் அகர்வால் 1 ரன்னிலும் , கோலி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா 40 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின் , ஸ்ரேயாஸ் ஐயர் - ராகுல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் சேர்தது. அதிகபட்சமாக ராகுல் 112 ரன்களும் , ஸ்ரேயாஸ் 62 ரன்களும் விளாசினர். 

தொடர்ந்து 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து. இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 297 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.  

நியூசிலாந்து அணியில் பென்னட் 4 விக்கெட்டுகளையும், ஜாமிசன் மற்றும் நீஷம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.

முடிவில்  47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் விளாசி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியிருந்தது. தற்போது அதற்கு பழிப்பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.

Next Story