தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 27 Feb 2020 11:01 PM GMT (Updated: 27 Feb 2020 11:01 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

கேப்டவுன்,

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் புகுந்தனர். இருவரும் தென்ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் நொறுக்கித் தள்ளி துரிதமாக ரன் சேர்த்தனர். ‘பவர்-பிளே’யில் (முதல் 6 ஓவரில்) அந்த அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்தது.

11.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 120 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. வார்னர் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ஆரோன் பிஞ்ச் (55 ரன்கள், 37 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மேத்யூ வேட் 10 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 19 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 7 ரன்னிலும் நடையை கட்டினர். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 2 சிக்சர் உள்பட 20 ரன்கள் திரட்டிய ஸ்டீவன் சுமித் 15 பந்துகளில் 30 ரன்னும், ஆஷ்டன் அகர் 1 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. கேப்டவுன் மைதானத்தில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதனால் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வான்டெர் துஸ்சென் 24 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் அகர் தலா 3 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் தனதாக்கியது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் பார்ல் நகரில் நாளை நடக்கிறது.

Next Story