நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்


நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்
x
தினத்தந்தி 9 April 2020 12:31 AM GMT (Updated: 9 April 2020 12:31 AM GMT)

நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. அத்துடன் நமது நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் லேசான உடற்பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் நேரத்தை கழிக்க சக வீரர்களுடன் சமூக வலைதளம் மூலம் உரையாடி வருகிறார்கள்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங்குடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். இருவரும் கிரிக்கெட் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் போது, யுவராஜ்சிங்கிடம் தற்போதைய இந்திய அணிக்கும், தாங்கள் விளையாடிய காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று ரோகித் சர்மா வினாவினார். அதற்கு பதிலளித்து யுவராஜ்சிங் கூறியதாவது:

‘நான் அணிக்குள் வந்த போதோ அல்லது நீ (ரோகித் சர்மா) அணிக்குள் வந்த போதோ நமது சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர். அப்போது சமூக ஊடகங்கள் கிடையாது. எனவே கவனச் சிதறல்களும் இல்லை. சீனியர் வீரர்களின் சில நடத்தை முறைகளை இளம் வீரர்கள் உறுதியாக பின்பற்ற வேண்டியதாக இருந்தது. அதாவது பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். மீடியாக்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதில் சீனியர் வீரர்களை பின்பற்ற வேண்டியது இருந்தது. ஏனெனில் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் தூதர்களாக விளங்கினார்கள்.

ஆனால் தற்போதைய வீரர்கள் முந்தைய காலத்தை போல் கிடையாது. இந்திய அணிக்காக விளையாடிய பிறகு உங்களது செயல்பாடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும் என்பதை இளம் வீரர்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். தற்போதைய இந்திய அணியில் நீயும், விராட் கோலியும் தான் சீனியர்கள். எஞ்சிய வீரர்களை நிலையானவர்கள் என்று சொல்ல முடியாது. சீனியர் வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு சில வீரர்கள் தான் சரியான நிலையுடன் இருப்பதாக நான் உணருகிறேன். தற்போது சீனியர், ஜூனியர் வீரர்களுக்கு இடையே சிறிய இடைவெளி தான் உள்ளது. யாரும், யாரிடமும் எதுபற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை தான் இப்போதைய இந்திய அணியில் உள்ளது. தற்போது இளம் வீரர்கள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. ஆனால் எங்கள் காலத்தில் இதுபோன்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. நாம் ஏதாவது செய்ய அதனை சீனியர் வீரர்கள் தவறு என்று சுட்டிக்காட்டிவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து பயந்தோம். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேசியது போன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் எங்கள் காலத்தில் சாத்தியமே கிடையாது. அதுபோன்ற சமபவங்கள் எங்கள் காலத்தில் நடந்திருக்காது. இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

அவர் மேலும் உரையாடுகையில், ‘தற்போதைய இளம் வீரர்கள் உண்மையான கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டியை விட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் தேசிய போட்டி இல்லாத காலங்களில் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும். இந்தியாவில் உள்ள வெவ்வேறு வகையான தன்மை கொண்ட பிட்ச்களில் விளையாடும் போது நல்ல அனுபவத்தை பெற முடியும்‘ என்று குறிப்பிட்டார்.

இந்திய அணியில் தான் அறிமுகம் ஆகும் போது இருந்தது குறித்தும், தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் ரோகித் சர்மா குறிப்பிடுகையில், ‘நான் இந்திய அணிக்கு வரும் போது நிறைய சீனியர் வீரர்கள் இருந்தனர். நான், பியூஷ் சாவ்லா, சுரேஷ்ரெய்னா ஆகியோர் தான் இளம் வீரர்கள். தற்போது இந்த சூழல் சற்று மாறி இருக்கிறது. நான் 5 முதல் 6 இளம் வீரர்களுடன் பேசுவதை தொடர்ந்து வருகிறேன். ரிஷாப் பண்டிடம் நிறைய பேசுகிறேன். கடினமாக உழைக்கும் அவர் குறித்து மீடியாக்கள் அதிகம் எழுதுகின்றன. அவரை பற்றி எழுதுவதற்கு முன்பு சற்று யோசிக்க வேண்டும். இருப்பினும் இந்திய அணிக்காக ஆடும் போது அதிக கவனம் இருக்கத்தான் செய்யும்‘ என்றார்.

Next Story