ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி


ஆர்சிபி அணியை விட்டு விலக மாட்டேன் - விராட் கோலி
x
தினத்தந்தி 25 April 2020 8:24 AM GMT (Updated: 25 April 2020 8:24 AM GMT)

ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மும்பை,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ஆர்சிபி வீரர்கள் விராட் கோலியும் டிவில்லியர்ஸும் உரையாடினார்கள். அப்போது விராட் கோலி கூறியதாவது:

ஆர்சிபி அணியை விட்டு விலகுவது குறித்து என்னால் யோசிக்கக் கூட முடியாது. ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன். ஐபிஎல்லில் விளையாடும் வரை உரிமையாளருக்காக விளையாட விரும்புகிறேன். அணியை விட்டு வெளியேறும் எந்த சூழ்நிலையும் இதுவரை இல்லை.

டிவில்லியர்ஸ் கூறியதாவது:

 நான் நிறைய ரன்கள் எடுக்கவேண்டும். எனக்கும் ஆர்சிபி அணியை விட்டு விலக விருப்பமில்லை. வருங்காலத்தில் இதன்மூலம் கிடைத்த உறவுகளையே எண்ணிப் பார்ப்போம். குறிப்பிட்ட ஆட்டத்தை அல்ல. சில அருமையான தருணங்களை எண்ணிக்கொள்வோம். அதை ஒருபோதும் இழக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story