உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுமா? - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது மேலாளர் விளக்கம்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுமா? - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது மேலாளர் விளக்கம்
x
தினத்தந்தி 28 July 2020 12:12 AM GMT (Updated: 28 July 2020 12:12 AM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுமா என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது மேலாளர் விளக்கமளித்துள்ளார்.


* கொரோனா வைரஸ் கோரதாண்டவம் காரணமாக பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்சில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுமா? என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது மேலாளர் ஜெப் அலார்ட்சிடம் கேட்ட போது கூறுகையில், ‘தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் டெஸ்ட் போட்டி தொடர்களை மீண்டும் நடத்துவது குறித்து உறுப்பு நாட்டு வாரியங்களுடன் ஆலோசித்து வருகிறோம். போட்டி தொடர்கள் எவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் நடத்தி முடிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே இறுதிப்போட்டி தேதியை தீர்மானிக்க முடியும். இருப்பினும் தற்போதைய நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இறுதிப்போட்டி நடத்துவது திட்டமாகும்’ என்றார்.

* 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி நேற்று விடுத்த ஒரு அறிக்கையில், ‘ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரபூர்வ கடிதம் வந்து இருக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசின் முடிவுக்காக நாங்கள் காத்து இருக்கிறோம். இந்த போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்து பல்வேறு துறையினருடன் ஆலோசனைகள் தொடங்கப்பட்டு விட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் அளித்த ஒரு பேட்டியில், ‘சாம்பியன் விளையாட்டு வீரரின் அடையாளம் சரிவில் இருந்து மீண்டு வருவதாகும். இதனை இந்த தொடரில் ஸ்டூவர்ட் பிராட்டிடம் காண முடிந்தது. டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகள் மட்டுமல்லாமல், 600-க்கும் மேலாக விக்கெட்டுகள் வீழ்த்தும் திறமை அவரிடம் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

* இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் மொத்தம் 33 ஆட்டங்கள் 2 இடங்களில் அரங்கேறுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story