ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா


ஐபிஎல்  கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Aug 2020 7:31 AM GMT (Updated: 13 Aug 2020 12:33 AM GMT)

ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெற இருக்கிறது. போட்டிக்காக அமீரகத்துக்கு புறப்படும் முன் அனைத்து அணிகளை சார்ந்தவர்களும் குறைந்தபட்சம் 2 முறை கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவுக்கு தகுந்தபடி தங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த போட்டியில் களம் காணும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், நிர்வாகிகள் அடுத்த வாரம் மும்பையில் ஒன்று கூடி, அங்கிருந்து அமீரகம் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக அணியை சேர்ந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்கிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்து வரும் அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்பதை உறுதி செய்ய நாங்கள் கூடுதலாக பரிசோதனைகளை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திஷாந்த் யாக்னிக் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். அதன் பிறகு அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இரண்டு சோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தால் அவர் அமீரகத்துக்கு பயணிக்க முடியும். அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் அவரிடம் மேலும் மூன்று முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகு தான் அவர் அணியின் பயிற்சியில் இணைய முடியும்.

கடந்த 10 நாட்களில் திஷாந்துடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தங்களை, தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். அவருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களோ? அல்லது ஐ.பி.எல். வீரர்களோ சமீபத்தில் நெருங்கிய தொடர்பில் இல்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். திஷாந்த் விரைவில் குணமடைந்து அமீரகத்தில் எங்களுடன் இணைவார் என்று எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

37 வயதான திஷாந்த் யாக்னிக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பராகவும் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க இருப்பவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.

Next Story