சி.பி.எல். கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது பார்படோஸ் அணி


சி.பி.எல். கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது பார்படோஸ் அணி
x
தினத்தந்தி 20 Aug 2020 12:31 AM GMT (Updated: 20 Aug 2020 12:31 AM GMT)

பார்படோஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் செயின்ட் கிட்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

6 அணிகள் இடையிலான 8-வது கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்படோஸ் டிரைடென்ட்ஸ், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை சந்தித்தது. முதலில் பேட் செய்த பார்படோஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ஜாசன் ஹோல்டர் 38 ரன்னும், ரஷித் கான் ஆட்டம் இழக்காமல் 26 ரன்னும், மிட்செல் சான்ட்னெர் 20 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுத்தது. இதனால் பார்படோஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் செயின்ட் கிட்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

பார்படோஸ் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான், சான்ட்னெர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னதாக மழை காரணமாக தாமதமாக தொடங்கிய முதலாவது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்சை தோற்கடித்தது. 2 விக்கெட் கைப்பற்றியதுடன், அரைசதம் அடித்த டிரின்பாகோ வீரர் சுனில் நரின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Next Story