ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 30 Sep 2020 10:31 PM GMT (Updated: 30 Sep 2020 10:31 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 2-வது வெற்றியை பெற்றது.

துபாய்,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் கோதாவில் குதித்தன. ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரினும், சுப்மான் கில்லும் இறங்கினர். ரன் கணக்கை தொடங்கும் முன்பே உத்தப்பாவின் கருணையால் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த நரின் 15 ரன்னில் கிளீன் போல்டாகி நடையை கட்டினார்.

இதன் பின்னர் சுப்மான் கில்லும், நிதிஷ் ராணாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 82 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை திவேதியா பிரித்தார். ராணா 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். சுப்மான் கில்லை (47 ரன், 34 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காலி செய்தார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா வீரர்கள் மிரண்டனர். அவர் தனது முதல் 3 ஓவர்களில் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் (1 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (24 ரன், 14 பந்து, 3 சிக்சர்) அடுத்தடுத்து வெளியேற கொல்கத்தா அணி நெருக்கடிக்குள்ளானது.

கடைசி கட்டத்தில் இயான் மோர்கன் நிலைத்து நின்று விளையாடி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. இதில் கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்ததும் அடங்கும். மோர்கன் 34 ரன்களும் (23 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), கம்மின்ஸ் 12 ரன்களும் எடுத்தனர்.

எக்ஸ்டிரா வகையில் அந்த அணிக்கு 8 வைடு உள்பட 11 ரன்கள் கிடைத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டும், உனட்கட், அங்கித் ராஜ்புத், டாம் கர்ரன், திவேதியா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. முந்தைய ஆட்டங்களின் ஹீரோக்கள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (3 ரன்), சஞ்சு சாம்சன் (8 ரன்) இருவரும் கொல்கத்தாவின் புயல்வேக பந்துவீச்சுக்கு இரையானார்கள். இதில் சுமித், கம்மின்சின் பந்து வீச்சை விரட்ட முயற்சித்த போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் சிக்கினார்.

தொடர்ந்து ஜோஸ் பட்லர் (21 ரன்), உத்தப்பா (2 ரன்), ரியான் பராக் (1 ரன்), திவேதியா (14 ரன்) ஆகியோரும் ‘சரண்’ அடைய ராஜஸ்தான் அணி முழுமையாக சீர்குலைந்தது.

66 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஊசலாடிய ராஜஸ்தான் அணியால் அதன் பிறகு நிமிர முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் கர்ரன் 54 ரன்களுடன் (2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

3-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே ஐதராபாத்தை வென்றிருந்தது. அதே சமயம் 3-வது லீக்கில் விளையாடிய ராஜஸ்தானுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

Next Story