‘ரஹானேவின் ஆட்டம் திருப்பு முனை’ - ரவிசாஸ்திரி


ஆட்டநாயகன் விருதுடன் ரஹானே; ரவிசாஸ்திரி
x
ஆட்டநாயகன் விருதுடன் ரஹானே; ரவிசாஸ்திரி
தினத்தந்தி 29 Dec 2020 5:40 PM GMT (Updated: 29 Dec 2020 5:40 PM GMT)

'விராட் கோலி, ரஹானே இருவரும் ஆட்டத்தை நன்றாக கணிக்கக்கூடியவர்கள். களத்தில், கோலி அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துவார். ரஹானே பொறுமையாக செயல்படுவார்’ என்றார்.

ஆட்டநாயகன் விருதுடன் ரஹானே
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய டெஸ்ட் தோல்விக்கு மெல்போர்னில் சுடச்சுட பதிலடி கொடுத்த இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே கூறுகையில், ‘உண்மையிலேயே எல்லா வீரர்களையும் நினைத்து பெருமைப்படுகிறேன். அறிமுக வீரர்களாக இறங்கி சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ், சுப்மான் கில் இருவரையும் பாராட்டியாக வேண்டும். முகமது சிராஜ் கட்டுக்கோப்புடன் பந்து வீசினார். அதுவும் அறிமுக டெஸ்டிலேயே இவ்வாறு பவுலிங் செய்வது எளிதல்ல. சுப்மான் கில் நிறைய முதல்தர கிரிக்கெட்டில் நன்றாக ஆடியிருப்பதை அறிவோம். தீவிரத்தன்மையுடன் ஷாட்டுகள் அடிப்பதை இந்த போட்டியில் அவர் காட்டினார். முதல்தர போட்டி அனுபவம் அவருக்கு உதவியிருக்கிறது. காயமடைந்த உமேஷ் யாதவ் தேறி வருகிறார். ரோகித் சர்மா அணியுடன் இணைவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். அவரும் அதே உற்சாகத்தில் இருக்கிறார்’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சில மோசமான கிரிக்கெட்டை ஆடி விட்டோம். எல்லா சிறப்பையும் இந்திய அணிக்கே வழங்க வேண்டும். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கில் எங்களை நெருக்கடிக்குள்ளாக்கி தவறு செய்ய வைத்தார்கள். எங்களது பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ரன்கள் குவித்தால் மட்டும் போதும். அது தான் தேவையாகும்’ என்றார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘முதல் இன்னிங்சில் ரஹானே இறங்கிய போது 2 விக்கெட்டை இழந்திருந்தோம். அதன் பிறகு 6 மணிநேரம் பேட்டிங்கில் போராடினார். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் பேட்டிங்குக்கு கடினமான அந்த நாளில் 6 மணி நேரம் கவனம் செலுத்துவது நம்ப முடியாத ஒன்று. அவரது இன்னிங்ஸ் தான் (112 ரன்) இந்த டெஸ்டில் திருப்பு முனையாகும். விராட் கோலி, ரஹானே இருவரும் ஆட்டத்தை நன்றாக கணிக்கக்கூடியவர்கள். களத்தில், கோலி அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துவார். ரஹானே பொறுமையாக செயல்படுவார்’ என்றார். ‘முதல் டெஸ்டில் மோசமாக தோற்று அதன் பிறகு வலுவாக மீண்டெழுந்து வெற்றி பெற்ற வகையில், இந்திய கிரிக்கெட்டில் மட்டும் அல்ல, உலக கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்றாகும்.’ என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார்.

Next Story