ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தள்ளிவைப்பு


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 3 Feb 2021 12:22 AM GMT (Updated: 3 Feb 2021 12:22 AM GMT)

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின், தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி தொடங்க இருந்தது. இந்த போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின், தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறுகையில், ‘தற்போது தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியினர் அங்கு என்று விளையாடுவது என்பது சாத்தியமற்றது. எங்கள் மக்களின் நலன் தான் எப்போதும் முதன்மையானதாகும். அந்த விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். இந்த தொடரை தள்ளிவைக்கும் முடிவை மிகுந்த வருத்தத்துடன் தான் எடுத்து இருக்கிறோம்’ என்றார்.

ஆஸ்திரேலியாவின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், இதனால் தங்களுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Next Story