பெங்களூரு அணி வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா


பெங்களூரு அணி வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 April 2021 7:00 PM GMT (Updated: 4 April 2021 5:02 PM GMT)

பெங்களூரு அணி வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் கொரோனாவும் ஒரு பக்கம் வீரர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நிதிஷ் ராணா (கொல்கத்தா), அக்‌ஷர் பட்டேல் (டெல்லி) ஆகிய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை மைதான ஊழியர்கள் 10 பேர் மற்றும் போட்டிக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களையும் தாக்கியது.

இந்த நிலையில் மேலும் ஒரு வீரர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். அந்த வீரரின் பெயர் தேவ்தத் படிக்கல். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமாகி 473 ரன்கள் (15 ஆட்டம்) குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த ஆண்டும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் கொரோனாவில் சிக்கியிருப்பது மருத்துவ பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக அணியை விட்டு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவகுழுவினர் அவரை கண்காணித்து வருகிறார்கள்.

கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டி இருப்பதால் வருகிற 9-ந்தேதி சென்னையில் நடக்கும் மும்பை இ்ந்தியன்சுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 20 வயதான தேவ்தத் படிக்கல் விளையாட வாய்ப்பில்லை. இது பெங்களூரு அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான் என்பதில் சந்தேகமில்லை.

Next Story