‘டோனிக்கு எதிரான ஆட்டத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்வேன்’; டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷாப் பண்ட் பேட்டி


‘டோனிக்கு எதிரான ஆட்டத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்வேன்’;  டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷாப் பண்ட் பேட்டி
x
தினத்தந்தி 7 April 2021 1:29 AM GMT (Updated: 7 April 2021 1:29 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த டெல்லி அணிக்கு இந்த முறை கோப்பையை வென்று கொடுப்பதில் ரிஷாப் பண்ட் தீவிரமாக உள்ளார். 

இதையொட்டி 23 வயதான ரிஷாப் பண்ட் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கேப்டனாக எனது முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்க இருக்கிறேன். டோனியிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விளையாடுவது சிறந்த அனுபவமாக இருக்கும். அது மட்டுமின்றி ஒரு வீரராகவும் எனக்கு என்று அனுபவம் உண்டு. எனது தனிப்பட்ட அனுபவத்தையும், டோனியிடம் இருந்து கற்றுக்கொண்டதையும் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வேன். தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதை எதிர்நோக்கியுள்ளேன். நாங்கள் இதுவரை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியதில்லை. இந்த ஆண்டு கோப்பையை வெல்வதற்கு எனது மிகச்சிறந்த முயற்சியை வெளிப்படுத்துவேன். கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஒரு அணியாக நாங்கள் உற்சாகமாக செயல்பட்டு வருகிறோம். போட்டிக்கு தயாராகி வரும் விதமும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொருவரும் நல்ல மனநிலையில் இருக்கிறோம். 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்த ஆர்வமுடன் உள்ளனர். அணியின் சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக உள்ளது. ஒரு கேப்டனாக இது தான் தேவையாகும்.

கடந்த 2-3 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கின் செயல்பாடு வியப்புக்குரிய வகையில் உள்ளது. அணிக்குள் உத்வேகத்தை கொண்டு வந்து ஊக்கப்படுத்துகிறார். பயிற்சியாளர் மற்றும் ஒட்டுமொத்த அணி வீரர்களின் உதவியுடன் இந்த முறை கடைசி தடையையும் வெற்றிகரமாக தாண்டி கோப்பையை முகர்வோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story