‘அபாயகரமான பேட்டிங் வரிசை எங்களிடம் உள்ளது’ கொல்கத்தா கேப்டன் மோர்கன் சொல்கிறார்


‘அபாயகரமான பேட்டிங் வரிசை எங்களிடம் உள்ளது’ கொல்கத்தா கேப்டன் மோர்கன் சொல்கிறார்
x
தினத்தந்தி 13 April 2021 12:41 AM GMT (Updated: 13 April 2021 12:41 AM GMT)

‘அபாயகரமான பேட்டிங் வரிசை எங்களிடம் உள்ளது’ என்று கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.

சென்னை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி பெற்ற 100-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 100 வெற்றிகளை குவித்த 3-வது அணி என்ற பெருமையை கொல்கத்தா பெற்றது. இந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் (120 வெற்றி), சென்னை சூப்பர் கிங்ஸ் (106 வெற்றி) அணிகள் முறையே முதல் 2 இடங்களில் உள்ளன.

இதில் முதலில் ‘பேட்’ செய்த கொல்கத்தா அணி நிதிஷ் ராணா (80 ரன்), ராகுல் திரிபாதி (53 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்கு 177 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 55 ரன்னும், மனிஷ் பாண்டே ஆட்டம் இழக்காமல் 61 ரன்னும் எடுத்தனர். 56 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 80 ரன்கள் குவித்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிதிஷ் ராணா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது. நாட்டின் மிகத்திறமை வாய்ந்த இரு வீரர்கள் (நிதிஷ் ராணா, சுப்மான் கில்) எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடுகிறார்கள். எங்கள் அணியின் பலத்தில் வலுவான பேட்டிங் வரிசையும் ஒன்றாகும். 3-வது வீரராக களம் கண்ட ராகுல் திரிபாதி அருமையாக ஆடினார். மிடில் வரிசையிலும் எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர். தினேஷ் கார்த்திக் (9 பந்துகளில் 22 ரன்) ஆடியது போல் ரஸ்செலும் தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் எங்கள் அணியின் பேட்டிங் வரிசை இன்னும் மிகவும் அபாயகரமானதாக அமைவதை பார்க்கலாம். அது எங்களுக்கு வெற்றி தேடித்தரக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.

நிதிஷ் ராணா நம்பிக்கையுடன் ஆக்ரோஷமாக அடித்து விளையாடினார். அவரது ஆட்டம் எங்களது மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி விளையாட வழிவகுத்தது. ஆந்த்ரே ரஸ்செல் நீண்ட நாட்களாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கடைசி கட்டத்தில் பந்து வீசுவது எளிதான காரியமல்ல. கடைசி ஓவரை ரஸ்செல் நேர்த்தியாக பந்து வீசி எங்களது வெற்றிக்கு உதவினார். முதல் ஓவரை ஹர்பஜன்சிங் சிறப்பாக வீசினார். எதிரணியின் பலத்தை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து தான் அவருக்கு முதல் ஓவரை வீசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் டேவிட் வார்னர் விக்கெட்டை கைப்பற்ற நல்ல வாய்ப்பை உருவாக்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டோம். அந்த ஓவருக்கு பிறகு அவர் பந்து வீசாவிட்டாலும், தனது அனுபவத்தை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து ஊக்கம் அளித்தார். ஹர்பஜன்சிங்கின் வருகை எங்கள் அணியின் சக்தியை அதிகரித்து இருக்கிறது. நீண்ட நாட்கள் கொண்ட இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.


Next Story