ஓய்வு முடிவில் மாற்றமில்லை: தென்ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் விளையாட வாய்ப்பில்லை; டிவில்லியர்ஸ் தகவல்


ஓய்வு முடிவில் மாற்றமில்லை: தென்ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் விளையாட வாய்ப்பில்லை; டிவில்லியர்ஸ் தகவல்
x
தினத்தந்தி 18 May 2021 5:14 PM GMT (Updated: 18 May 2021 5:14 PM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனாலும் 20 ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக களம் இறங்கிய அவர் அதிரடியில் வெளுத்து வாங்கினார். இன்னும் அவர் பார்மில் இருப்பதால் அவரை அணிக்குள் இழுக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. அவரும் மறுபிரவேசம் செய்ய ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார். ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் தனது உடல்தகுதியும், ஆட்டத்திறனும் நல்ல நிலையில் இருந்தால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் 20 ஓவா் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்காக ஆட வாய்ப்பு இருப்பதாக டிவில்லியர்ஸ் கூறினார்.

இந்த நிலையில் 37 வயதான டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவில் இருந்து விடுபட வாய்ப்பில்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளார். அவருடன் ஆலோசனை நடத்திய தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘டிவில்லியர்சுடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தனது ஓய்வு முடிவே இறுதியாது. அதில் மாற்றம் இல்லை என்று டிவில்லியர்ஸ் கூறி விட்டார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story