உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியும் - இந்திய வீரர் புஜாரா நம்பிக்கை


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியும் - இந்திய வீரர் புஜாரா நம்பிக்கை
x
தினத்தந்தி 20 May 2021 8:16 PM GMT (Updated: 20 May 2021 8:16 PM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியும் என இந்திய வீரர் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை, 

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம்( ஜூன்) 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய பேட்ஸ்மேன் 33 வயதான புஜாரா அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தோம். அதை வைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்று சொல்லி விட முடியாது. அந்த தொடர் அவர்களது நாட்டில் நடந்தது. 

ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இரு நாட்டுக்கும் பொதுவான இடத்தில் நடக்கிறது. யாருக்கும் உள்ளூர் போட்டி என்ற சாதகமான விஷயம் இருக்காது. நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். எங்களது திறமைக்கு தக்கபடி விளையாடினால் போதும். உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்த முடியும். 

இந்த போட்டிக்கு நாங்கள் குறைந்த காலமே தயாரானாலும் கூட வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு அணியிடம் போதுமான திறமை உள்ளது. சமீப காலமாக நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றிருப்பதால், அதே நம்பிக்கையுடன் நியூசிலாந்தை எதிர்கொள்வோம்’ என்றார்.

Next Story