இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷாப் பண்ட்க்கு கொரோனா


இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷாப் பண்ட்க்கு கொரோனா
x
தினத்தந்தி 16 July 2021 12:24 AM GMT (Updated: 16 July 2021 12:24 AM GMT)

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், பயிற்சி உதவியாளர் தயானந்த் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டன், ஜூலை,

இங்கிலாந்தின் சவுத்தம்டனில் கடந்த மாதம் (ஜூன் 18-23) நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக இந்திய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் லெவன் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் டர்ஹாமில் வருகிற 20-ந் தேதி தொடங்கி நடக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்ததும், இந்திய அணியினருக்கு 20 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் அணி வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பிடித்தமான இடங்களை சுற்றி பார்த்தனர். சில வீரர்கள் லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் மற்றும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியை கண்டு ரசித்தனர். சிலர் தங்களது நண்பர்களுடன் ஊர் சுற்றினார்கள். யூரோ கால்பந்து போட்டியை நேரில் பார்த்த புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்த ரிஷாப் பண்ட் ஓய்வு நாட்களில் வீரர்களுடன் ஓட்டலில் தங்காமல் தனது நண்பர் வீட்டில் தங்கினார்.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், தனக்கு தெரிந்த இடத்தில் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வரும் அவர் லண்டனில் இருந்து டர்ஹாமுக்கு நேற்று புறப்பட்டு சென்ற இந்திய அணியினருடன் செல்லவில்லை.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில், ‘இங்கிலாந்து பயணத்தில் இடம் பெற்றுள்ள நமது அணி வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மை தான். அவர் கடந்த 8 நாட்களாக தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார். அவர் அணியினருடன் இணைந்து ஓட்டலில் தங்கவில்லை. இதனால் அணியின் மற்ற வீரர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வாரிய செயலாளர் ஜெய்ஷா ஏற்கனவே எல்லா வீரர்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தார்’ என்றார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்திய அணியின் பயிற்சி உதவியாளர் தயானந்த் கரானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, மாற்று வீரர் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோருக்கு பாதிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் அங்குள்ள விதிமுறைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இனிமேல் அணியினருக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 10 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்து 2 முறை கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகு ரிஷாப் பண்ட் உள்ளிட்டோர் அணியினருடன் இணைய முடியும். இந்திய அணி கொரோனாவில் சிக்கி இருப்பது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

Next Story