டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லைக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லைக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி
x
தினத்தந்தி 21 July 2021 6:36 PM GMT (Updated: 21 July 2021 6:36 PM GMT)

நெல்லைக்கு எதிரான ஆட்டத்தில் 74 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை, 

8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. முதல் இரு ஆட்டங்கள் மழையால் ரத்தான நிலையில் 3-வது லீக்கில் நேற்றிரவு நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி வாரியர்ஸ் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த நெல்லை கேப்டன் பாபா அபராஜித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 இதன்படி முதலில் பேட் செய்த திருச்சி அணி 15 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அமித் சாத்விக் (71 ரன், 52 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அணியை நிமிர வைத்தார். ஆதித்யா கணேஷ் (33 ரன்), அந்தோணி தாஸ் (35 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்து சவாலான ஸ்கோரை அடைய உதவினர். 

20 ஓவர் முடிவில் திருச்சி அணி 5 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. நெல்லை தரப்பில் ஷருண் குமார் 2 விக்கெட்டும், அதிசயராஜ் டேவிட்சன், அஜித் குமார், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நெல்லை அணி 13.4-ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 77 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Next Story