டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 24 July 2021 2:26 PM GMT (Updated: 24 July 2021 2:26 PM GMT)

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கேப்டன் கவுசிக் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரரான ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்டமிழந்தார். 

பின்னர் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியின் சார்பில் கேப்டன் அபராஜித் மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் களமிறங்கினர். அதில் சூர்யபிரகாஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஞ்சன் பால், அபராஜித்துடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தினை பதிவு செய்தனர். அந்த ஜோடியில் அபராஜித் 55 ரன்களும், ரஞ்சன் பால் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிவில் நெல்லை அணி 19.4 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

Next Story