பயிற்சி கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல்


பயிற்சி கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 15 Sep 2021 11:11 PM GMT (Updated: 15 Sep 2021 11:11 PM GMT)

பயிற்சி கிரிக்கெட்டில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தினார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதற்கட்ட ஆட்டங்களில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) 3-வது இடத்தில் உள்ளது. அமீரகத்தில் மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது. பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெங்களூரு அணியினர் அங்கு தங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் மோதினர். இதில் ஹர்ஷல் பட்டேல் தலைமையிலான பெங்களூரு ஏ அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் புகுந்த டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 104 ரன்களும் (7 பவுண்டரி, 10 சிக்சர்), முகமது அசாருதீன் 43 பந்துகளில் 66 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் தலைமையிலான பெங்களூரு பி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது, பவுண்டரியோடு நிறைவு செய்தனர். கே.எஸ்.பரத் 95 ரன்களும் (47 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) தேவ்தத் படிக்கல் 36 ரன்களும் (21 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

ஆட்டம் முடிவில் அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் சஞ்சய் பாங்கர் கூறுகையில், ‘இவ்வளவு பெரிய ஸ்கோர் சேசிங் செய்யப்படும் என்று நம்பினோம். இருப்பினும் முதல் இன்னிங்சில் டிவில்லியர்சின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. அசாருதீனும் நன்றாக ஆடினார். 2-வது இன்னிங்சில் பரத்-படிக்கல் ஜோடி 6 ஓவர்களில் 70 ரன்கள் திரட்டியது பாராட்டுக்குரிய முயற்சியாகும். மொத்தத்தில் அனைவரும் அடித்த கிரிக்கெட் ஷாட்டுகளை பார்ப்பதற்கு மிகவும் திருப்தி அளித்தது’ என்றார்.

Next Story