டிஎன்பிஎல் முதலாவது தகுதி சுற்று: சச்சின் , முகிலேஷ் அதிரடி..! கோவை அணி 193 ரன்கள் குவிப்பு


டிஎன்பிஎல் முதலாவது தகுதி சுற்று: சச்சின் , முகிலேஷ் அதிரடி..! கோவை அணி 193 ரன்கள் குவிப்பு
x

திண்டுக்கல் சார்பில் சுபோத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

சேலம்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் வீரர்கள் சுரேஷ் குமார் 26 ரன்கள் , சுஜய் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சச்சின் , முகிலேஷ் இணைந்து சிறப்பாக ஆடினர்.

அதிரடியாக ரன்கள் குவித்து இருவரும் , பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.முகிலேஷ் 44 ரன்களில் வெளியேறிய நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய சச்சின் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து அவர் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கோவை அணி 193 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் சுபோத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்க உள்ளது.


Next Story