டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது நெல்லை ராயல் கிங்ஸ்..!


டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது நெல்லை ராயல் கிங்ஸ்..!
x

image courtesy: TNPL twitter

20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

நெல்லை,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மதுரை பாந்தர்சை வீழ்த்தி 2-வது குவாலிபயர் ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விமல் குமார், ஷிவம் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் விமல் குமார் 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஷிவம் சிங்குடன் பூபதி குமார் இணைந்தார். இந்த இணை நெல்லையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.

அதிரடியாக ஆடிய இவர்களால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் பூபதி குமார் 28 பந்தில் 41 ரன் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் ஷிவம் சிங் 37 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ஆதித்ய கணேஷ் ஷிவம் சிங்குடன் இணைந்தார். அதிரடியில் மிரட்டிய ஷிவம் சிங் 46 பந்தில் 76 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஆதித்ய கணேசுடன் சரத் குமார் ஜோடி சேர்ந்தார். இறுதியில் திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அருண் கார்த்திக் மற்றும் சுகேந்திரன் முறையே 26 ரன்களும், 22 ரன்களும் எடுத்தனர்.

நிதிஷ் ராஜகோபால் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய குருசுவாமி அஜித்தேஷ் 44 பந்துகளில் 73 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ரித்திக் ஈஸ்வரன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது. இதன்மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 2-வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகிறது.


Next Story