‘உலக சாம்பியன் மாதிரி ஆடவில்லை’ அணி நிர்வாகம் வேதனை


‘உலக சாம்பியன் மாதிரி ஆடவில்லை’ அணி நிர்வாகம் வேதனை
x
தினத்தந்தி 28 Jun 2018 11:03 PM GMT (Updated: 28 Jun 2018 11:03 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியும், உலக சாம்பியனுமான ஜெர்மனி அணி, நேற்று முன்தினம் தனது கடைசி லீக்கில் தென்கொரியாவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.

பிராங்பர்ட்,

கடந்த 4 உலக கோப்பை போட்டிகளில் குறைந்தது அரைஇறுதி வரை வந்த ஜெர்மனி அணி, இந்த தடவை குரூப் சுற்றிலேயே தகிடுதத்தம் போட்டு அடங்கி விட்டது. தோல்வியால் துவண்டு போன ஜெர்மனி வீரர்கள் நேற்று ரஷியாவில் இருந்து புறப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

முன்னதாக ஜெர்மனி அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரியமான ரசிகர்களே, உங்களை ஏமாற்றிவிட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம். உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைத்தான் வருகிறது. அதனால் நாங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் ஒரு உலக சாம்பியன் மாதிரி ஆடாதது வேதனையும், ஏமாற்றமும் அளிக்கிறது’ என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஜெர்மனி கேப்டனும், கோல் கீப்பருமான மானுவல் நியர் கூறுகையில், ‘இந்த வெளியேற்றத்துக்கு நாங்கள் தகுதி படைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் எந்த ஒரு ஆட்டத்திலும் திருப்தி அளிக்கும் அளவுக்கு முழு திறமையை நிரூபித்து காட்டவில்லை. வழக்கமான ஜெர்மனி அணியின் ஆட்டம் போலவே இது இல்லை. இதே போல் அர்ப்பணிப்பும், உத்வேகமும் குறைவாகவே காணப்பட்டது. ஒரு வேளை 2-வது சுற்றை எட்டினாலும் கூட, இந்த மாதிரி ஆடும் போது அதற்கு அடுத்த ரவுண்டில் இருந்து வெளியேறி தான் இருப்போம்’ என்றார்.

Next Story