ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி மீண்டும் தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 26 Oct 2018 9:00 PM GMT (Updated: 26 Oct 2018 8:29 PM GMT)

10 அணிகள் இடையிலான 5–வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கவுகாத்தி, 

10 அணிகள் இடையிலான 5–வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 19–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது. 3–வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் காலு உச்சே முதல் கோல் அடித்தார். 13–வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் ஜான்சன் தலையால் முட்டி கோல் போட்டார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 50–வது கோல் இதுவாகும். 17–வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் கார்லோஸ் சலோம் இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் கொல்கத்தா அணி 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதியிலும் பந்து அதிக நேரம் சென்னை அணியினரின் வசம் இருந்தாலும் மேலும் கோல் எதுவும் வரவில்லை. எதிரணி கோல் எல்லையை நோக்கி சென்னை அணி வீரர்கள் அடித்த 5 ஷாட்களில் ஒன்று மட்டுமே கோலானது. 4 ஷாட்கள் வீணானது. முடிவில் கொல்கத்தா அணி 2–1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது. 5–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் டிராவும், 2 ஆட்டத்தில் தோல்வியும் கண்டு இருந்தது. 5–வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை சந்தித்த 4–வது தோல்வி இது. ஒரு ஆட்டத்தில் டிரா கண்டுள்ளது.

மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.–டெல்லி டைனமோஸ் எப்.சி அணிகள் மோதுகின்றன.


Next Story