ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வி
x
தினத்தந்தி 31 Oct 2019 12:15 AM GMT (Updated: 31 Oct 2019 12:15 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வியடைந்தது.

சென்னை,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. முன்னாள் சாம்பியன்களான இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டம் மழை சாரலுக்கு மத்தியில் அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பிற்பாதியில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் (48-வது நிமிடம்) கொல்கத்தா அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் டேவிட் வில்லியம்ஸ் இந்த கோலை அடித்தார். ஐ.எஸ்.எல். கால்பந்து வரலாற்றில் இது 1,000-வது கோலாகும்.

சென்னை அணியின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் வலம் வந்தாலும் (57 சதவீதம்), இலக்கை நோக்கி 6 முறை ஷாட் அடிக்கப்பட்ட போதிலும் அதிர்ஷ்டம் தான் இல்லை. சென்னை அணியின் சில வாய்ப்புகளை கொல்கத்தா கோல் கீப்பர் அரிந்தம் பட்டாச்சார்யா அருமையாக முறியடித்தார். முடிவில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2-வது தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. -ஒடிசா எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

Next Story