ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி
x
தினத்தந்தி 7 Dec 2019 11:02 PM GMT (Updated: 7 Dec 2019 11:02 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி முதல் தோல்வியை சந்தித்தது.

கவுகாத்தி,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) பந்தாடியது. பந்து அதிகமாக யுனைடெட் அணியினர் வசம் (57 சதவீதம்) சுற்றினாலும் இலக்கை நோக்கி உதைப்பதில் கொல்கத்தாவின் ஆதிக்கமே மேலோங்கியது. டேவிட் வில்லியம்ஸ் (11-வது நிமிடம்), ராய் கிருஷ்ணா (35, 90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். கொல்கத்தாவின் மேலும் சில வாய்ப்புகள் மயிரிழையில் நழுவிப் போயின.

7-வது லீக்கில் ஆடிய கொல்கத்தா அணி 4 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. தனது முதலாவது தோல்வியை தழுவிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 10 புள்ளியுடன் (2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி) 4-வது இடத்தில் இருக்கிறது. ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் ஐதராபாத் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மல்லுகட்டுகின்றன.


Next Story