தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி


தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 17 Jan 2019 9:22 PM GMT (Updated: 17 Jan 2019 9:22 PM GMT)

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை, 

41 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் ஆட்டம் முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, எல்லை பாதுகாப்பு படை அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தமிழக அணி 3-0 என்ற கோல் கணக்கில் எல்லை பாதுகாப்பு படை அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. தமிழக அணியில் ராயர் 2 கோலும், முத்துசெல்வன் ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் சாய் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. சாய் அணியில் பாபி சிங் தாமி 2 கோல்களையும் அடித்தார். இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் மத்திய தலைமை செயலக அணி 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.ஐ. அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு கால்இறுதியில் பெங்களூரு அணி 5-4 என்ற கோல் கணக்கில் பாட்டியாலா அணியை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-சாய் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் மத்திய தலைமை செயலகம்-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன.

Next Story