மாநில ஆக்கி சென்னை மாநகர போலீஸ் அணி வெற்றி


மாநில ஆக்கி சென்னை மாநகர போலீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 2 March 2019 10:00 PM GMT (Updated: 2 March 2019 7:16 PM GMT)

மாநில ஆக்கி போட்டியில், சென்னை மாநகர போலீஸ் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தபால் துறை அணியை வீழ்த்தியது. போலீஸ் அணியில் திவாகரன் 2 கோலும் (7-வது, 33-வது நிமிடம்), ரகு (44-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வீரர்கள் ஆக்கி அகாடமியை தோற்கடித்தது. இதில் முதல் 21 நிமிடங்களில் 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த சென்னை மாநகர போலீஸ் அணி அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு வெற்றிக்கனியை பறித்தது.

சென்னை மாநகர போலீஸ் அணியில் மருது, கந்த குரு, ஸ்ரீதர், பிரதாப் தலா ஒரு கோல் அடித்தனர். இன்னொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 9-1 என்ற கோல் கணக்கில் ஆயுதப்படை போலீஸ் அணியை பந்தாடியது. வருமான வரி அணியில் பிச்சை மணி, பீம் யாதவ் தலா 2 கோலும், சிங்கப்பா, சிவமணி, ஞானவேல், ரஞ்சித், சார்லஸ் தலா ஒரு கோலும் திணித்தனர். இன்றைய ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே-தமிழ்நாடு போலீஸ் (பிற்பகல் 2.30 மணி), சென்னை மாநகர போலீஸ்-இந்தியன் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story