‘இந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன்’ - பயிற்சியாளர் சொல்கிறார்


‘இந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன்’ - பயிற்சியாளர் சொல்கிறார்
x
தினத்தந்தி 18 Nov 2019 11:30 PM GMT (Updated: 18 Nov 2019 11:30 PM GMT)

இந்திய ஆக்கி அணி வீரர்களின் தனிப்பட்ட திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தெரிவித்தார்.

புவனேஸ்வரம்,

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இந்திய ஆக்கி அணி, ரஷியாவை வீழ்த்தி அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய ஆக்கி அணி அடுத்து வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் புரோ லீக் போட்டியில் நெதர்லாந்தை சந்திக்கிறது.

இந்த நிலையில் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் ஸ்ரீஜேஷ், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், மன்பிரீத் சிங், மன்தீப் சிங், ரமன்தீப் சிங், சுனில் உள்பட 33 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பயிற்சி முகாம் குறித்து இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் அளித்த ஒரு பேட்டியில், ‘உடனடியாக எங்களுக்கு போட்டி எதுவும் இல்லை. இதுநாள் வரை நாங்கள் அணியின் ஆட்ட யுக்தியில் முன்னேற்றம் காண்பதில் தான் அதிக கவனம் செலுத்தினோம். இந்த பயிற்சி முகாமில் வீரர்களின் தனிப்பட்ட திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் அடுத்த 9 மாதத்துக்கு எங்களது ஆட்ட திட்டத்தை மேம்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி ஜனவரி 11-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை நடைபெறும் என்று சர்வவதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும். மொத்தம் 144 போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

தொடக்க லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-சீனா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புவனேஸ்வரத்தில் ஜனவரி 18-ந் தேதி நடக்கிறது. இந்திய அணியின் உள்ளூர் ஆட்டங்கள் புவனேஸ்வரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story