ஆசிய பேட்மிண்டன்: இந்திய அணிகள் வெற்றி


ஆசிய பேட்மிண்டன்: இந்திய அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 6 Feb 2018 10:45 PM GMT (Updated: 6 Feb 2018 8:18 PM GMT)

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நேற்று தொடங்கியது. இந்திய அணிகள் வெற்றிபெற்றது.

அலோர்செடார்,

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-12, 21-18 என்ற நேர்செட்டில் யிப் புய் யின்னை (ஹாங்காங்) தோற்கடித்தார். இரட்டையர் ஆட்டத்தில் சிந்து, சிக்கி ரெட்டியுடன் இணைந்து 21-15, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் டிஸ் யாவ்-யுன் சின் யிங் ஜோடியை வீழ்த்தினார். ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கிருஷ்ணபிரியாவும், இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி-பிரஜக்தா சவாந்த் ஜோடியும் தோல்வியை சந்தித்தது. மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ருத்விகா ஷிவானி காதே 16-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் யுங் சும் யீயை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். காயம் காரணமாக சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பெண்கள் அணி அடுத்த ஆட்டத்தில் நாளை வலுவான ஜப்பானை எதிர்கொள்கிறது.

ஆண்கள் பிரிவில் எல்லா ஆட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ்சை எளிதில் ஊதி தள்ளியது. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், சமீர் வர்மா ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களிலும், அர்ஜூன்-ராமச்சந்திரன் ஷோக், மனு அட்ரி-ரங்கி ரெட்டி ஜோடி இரட்டையர் ஆட்டங்களிலும் வெற்றியை சுவைத்தது. இந்திய ஆண்கள் அணி அடுத்த ஆட்டத்தில் இன்று மாலத்தீவை சந்திக்கிறது.

Next Story