துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 Oct 2018 10:31 PM GMT (Updated: 15 Oct 2018 10:31 PM GMT)

உலக டென்னிஸ் வீரர் - வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது.


* ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பகல் 11.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

* உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,660 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் பட்டத்தை வென்ற செர்பியா வீரர் ஜோகோவிச் (7,445 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். ஷாங்காய் போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,260 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார். அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ (5,860 புள்ளிகள்), ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (5,025 புள்ளிகள்), குரோஷியா வீரர் மரின் சிலிச் (4,185 புள்ளிகள்), ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் (3,825 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் (3,775 புள்ளிகள்), பல்கேரியா வீரர் டிமித்ரோவ் (3,440 புள்ளிகள்), அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் (3,290 புள்ளிகள்) ஆகியோர் 4 முதல் 10 இடங்களில் தொடருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் முதலிடத்தில் நீடிக்கிறார்.

* தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 2 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் தேசிய மற்றும் மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.8 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க சீனியர் துணைத்தலைவர் ஐசரி கணேஷ், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ராஜ் சத்யன் ஆகியோர் தெரிவித்தனர்.

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வு குழுவின் முன்னாள் தலைவருமான ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவினர் 2 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்பு குழுவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் ஊழல் தடுப்பு குழுவின் விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை கொடுக்க மறுத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி ஜெயசூர்யாவுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story