து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 7 Dec 2018 9:00 PM GMT (Updated: 7 Dec 2018 8:27 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 100–வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 29–27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 13–வது வெற்றியை ருசித்தது.

* 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய 51-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. புனே வீரர் மார்செலோ 20-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இன்றைய ஆட்டத்தில் கவுகாத்தி-கொல்கத்தா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* புரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 100-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 29-27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 13-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 53-36 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வென்றது.

* அடிலெய்டு மைதானத்தில் கடந்த மூன்று சீசனில் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்து வந்தது. இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் வேறு வழியின்றி வழக்கமான நேரத்தில் தற்போதைய டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் கவலை அடைந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ், ‘பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்குரிய கணிசமான ரசிகர்களை இழந்துள்ளோம் என்பதே உண்மை. மீண்டும் இங்கு பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் ஆவலில் உள்ளோம். அடுத்த முறை இந்திய அணி இங்கு வரும் போது பகல்-இரவு டெஸ்டில் விளையாட சம்மதிக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

* மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 100-85 என்ற புள்ளி கணக்கில் சென்னை விளையாட்டு விடுதியையும், பெண்கள் பிரிவில் அரைஸ் அணி 68-36 என்ற புள்ளி கணக்கில் அர்பன் அணியையும் தோற்கடித்தது.

* மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் டாக்டர் சடையவேல் கைலாசம் போட்டியை தொடங்கி வைத்தார். செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான (குரூப்3) 200 மீட்டர் தனிநபர் மெட்லி பந்தயத்தில் எஸ்.டி.ஏ.டி. (சென்னை) வீரர் நித்திக் 2 நிமிடம் 34.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான (குரூப்4) 200 மீட்டர் தனிநபர் மெட்லி பந்தயத்தில் எஸ்.டி.ஏ.டி. (மதுரை) வீராங்கனை ரோஷினி 2 நிமிடம் 53.16 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.


Next Story