துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 25 Feb 2019 9:45 PM GMT (Updated: 25 Feb 2019 7:04 PM GMT)

32-வது சர்வதேச ஓபன் செஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள கேனெஸ்சில் நடந்தது.


* உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். இந்திய வீரர்கள் ராம்குமார் 9 இடங்கள் சரிந்து 137-வது இடத்தையும், யுகி பாம்ப்ரி சரிவை சந்தித்து 171-வது இடத்தையும், சகெத் மைனெனி 250-வது இடத்தையும், சசிகுமார் முகுந்த் 269-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 38-வது இடத்திலும், திவிஜ் சரண் 39-வது இடத்திலும் நீடிக்கின்றனர். லியாண்டர் பெயஸ் 2 இடம் முன்னேறி 73-வது இடத்தையும், ஜீவன் நெடுஞ்செழியன் 75-வது இடத்தையும், புரவ்ராஜா 96-வது இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்திலும், ருமேனியா வீராங்கனை சிமோனே ஹாலெப் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். துபாய் ஓபன் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். துபாய் ஓபன் பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் 22 இடங்கள் ஏற்றம் கண்டு 23-வது இடத்தை பிடித்துள்ளார்.

* 32-வது சர்வதேச ஓபன் செஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள கேனெஸ்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்ஸ்மாஸ்டர் அபிஜித் குப்தா, இத்தாலி வீரர் பிர் லூய்ஜி பாஸ்சோவை சந்தித்தார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 9 சுற்றுகள் முடிவில் 6 வெற்றி, 3 டிராவுடன் 7.5 புள்ளிகள் பெற்ற அபிஜித் குப்தா சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

* ஐ லீக் கால்பந்து போட்டியில் ரியல் காஷ்மீர்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையிலான ஆட்டம் ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வருகிற 28-ந் தேதி நடக்க இருந்தது. காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இந்த போட்டியை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று ஈஸ்ட் பெங்கால் அணி நிர்வாகம் கேட்டு இருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இந்த போட்டி பொதுவான இடமான டெல்லியில் நடைபெறும் என்று நேற்று அறிவித்துள்ளது. ஏற்கனவே ஸ்ரீநகரில் நடைபெற இருந்த போட்டியில் விளையாட முடியாது என்று மினர்வா பஞ்சாப் அணி தனது ஆட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

* சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற 35 வயதான தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், இங்கிலாந்து கவுண்டி கிளப் அணியான மிடில்செஸ்சில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிடில்செஸ் அணியினருடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருப்பதாக டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.



Next Story