துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 22 March 2019 10:15 PM GMT (Updated: 22 March 2019 7:27 PM GMT)

* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வீரர்கள் சீருடையில் தங்களது பெயர் மற்றும் எண்களை பொறித்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்த சலுகையை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

* சார்ஜாவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது. ஹாரிஸ் சோகைல் (101 ரன்) சதம் அடித்தார். பின்னர் 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடியது.

* உலக கோப்பை அணிக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டியில் கட்டாயம் ஆட வேண்டும் என்று இலங்கை தேர்வு குழு நிர்ப்பந்தித்து இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தன்னால் முதல் 6 ஆட்டங்களில் ஆட இயலாது என்று வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறியுள்ளார்.

* அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-7 (3), 4-6 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ஜாமி முனாரிடம் வீழ்ந்தார்.

* உலக கோப்பை போட்டிக்கு முழு உடல்தகுதியுடன் புத்துணர்ச்சியோடு இருப்பதற்காக ஐ.பி.எல். தொடரில் ஒன்று அல்லது 2 ஆட்டங்களில் தான் ஓய்வு எடுக்க வாய்ப்புள்ளதாக பெங்களூரு கேப்டன் விராட் கோலி நேற்று தெரிவித்தார். ‘ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கு எல்லா வகையிலும் முயற்சிக்கிறோம். அதற்காக ஐ.பி.எல். கோப்பை வெற்றி-தோல்வியை வைத்து என்னை மதிப்பீடு செய்தால் அது பற்றி கவலையில்லை’ என்றும் கோலி கூறினார்.

Next Story