மாநில நீச்சல் போட்டி: எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணி ‘சாம்பியன்’


மாநில நீச்சல் போட்டி: எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 4 Jun 2019 10:59 PM GMT (Updated: 4 Jun 2019 10:59 PM GMT)

மாநில நீச்சல் போட்டியில், எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 36-வது சப்-ஜூனியர் மற்றும் 46-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் நடந்தது. குரூப்1 முதல் குரூப்4 வரையிலான 4 பிரிவுகளில் சிறுவர், சிறுமிகளுக்கான இந்த போட்டியில் சுமார் 650 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் சிறுவர்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணி 220 புள்ளிகளும், சிறுமிகள் பிரிவில் ஆர்கா அணி 216 புள்ளிகளும் பெற்று முதலிடம் பிடித்தன. இரு பிரிவையும் சேர்த்து எஸ்.டி.ஏ.டி. டால்பின் (சென்னை) அணி 346 புள்ளிகள் குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிறுவர்கள் தனிநபர் பிரிவில் ஆதித்யா (டி.எஸ்.பி.ஏ.), ஜோஸ்வா தாமஸ் (பாலகிருஷ்ணா பள்ளி), ஸ்ரியாஸ் (எஸ்.டி.ஏ.டி. டால்பின்), யஷ்வந்த் (டர்டில்ஸ்) ஆகியோரும், சிறுமிகள் தனிநபர் பிரிவில் பிரியங்கா (டி.என்.எஸ், கிளப்), சக்தி (துபாய்), வேதிகா (மெரினா), அக்ரிதி மாலினா சபாத் (வேவ்ஸ்) ஆகியோரும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினர்.

பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துணை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கினார். தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் டாக்டர் சடையவேல் கைலாசம், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் முரளிதரன், துணைத்தலைவர்கள் முனியாண்டி, முகுந்தன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story