அகில இந்திய கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா அணி வெற்றி


அகில இந்திய கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா அணி வெற்றி
x
தினத்தந்தி 24 Jun 2019 11:34 PM GMT (Updated: 24 Jun 2019 11:34 PM GMT)

அகில இந்திய கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், சுங்க இலாகா அணி வெற்றிபெற்றது.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 10 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் வருமான வரி தீர்ப்பாய உறுப்பினர் என்.ஆர்.எஸ். கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், வருமான வரி கமிஷனர் கே.ரவி ராமச்சந்திரன், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், ஆர். முருகேசன், மணிகண்டன், ராஜன், போஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் பீனா போஸ், போட்டி அமைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா-எஸ்.ஆர்.எம். அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சுங்க இலாகா அணி 25-23, 25-18, 25-22 என்ற நேர்செட்டில் எஸ்.ஆர்.எம். அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 25-20, 25-16, 25-20 என்ற நேர்செட்டில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை வென்றது.


Next Story