உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் விரைவில் தொடக்கம்


உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் விரைவில் தொடக்கம்
x
தினத்தந்தி 24 July 2019 11:36 PM GMT (Updated: 24 July 2019 11:36 PM GMT)

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது.


* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டது. இந்த நியமனத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டபிள்யூ.வி.ராமன் நியமன விவகாரம் குறித்து பரிசீலனை செய்யும் பொறுப்பை இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயினிடம் நிர்வாக கமிட்டி ஒப்படைத்துள்ளது.

* சர்வதேச குத்துச்சண்டை போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை சிடோராவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பதக்கம் வெல்வது உறுதியானது. ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் தீபக் சிங், தாய்லாந்து வீரர் சமாக் சாஹனை எதிர்கொண்டார். இதில் தீபக் சிங் விட்ட குத்து எதிராளியின் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. இதனால் முதல் ரவுண்டிலேயே போட்டி நிறுத்தப்பட்டு தீபக் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் இந்தியாவை சேர்ந்த ஆஷிஷ் (69 கிலோ), மஞ்சு ராணி (48 கிலோ), பிரிஜேஷ் யாதவ் (81 கிலோ), முகமது ஹூசாமுதீன் (56 கிலோ) ஆகியோரும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

* சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 3-வது இது இடத்துக்கான ஆட்டத்தில் சிலி அணிக்கு எதிராக களம் இறங்கிய அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி முரட்டு ஆட்டம் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் மெஸ்சி தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பை கடுமையாக சாடினார். தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரேசில் அணி கோப்பையை வெல்ல ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன் பரிசளிப்பு விழாவின் போது தன்னுடைய வெண்கலப்பதக்கத்தை வாங்காமல் புறக்கணித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மெஸ்சிக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதித்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. தடை காரணமாக உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில் முதல் ஆட்டத்தில் மெஸ்சி விளையாட முடியாது.

* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த ஒரு பேட்டியில், ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க இருப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு சரியான தருணத்தில் அரங்கேறுகிறது. இரு நாட்டு தொடர்களாக இருந்த போதிலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒவ்வொரு தொடருக்கும் திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

* உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் போது முதல்முறையாக வீரர்களின் சீருடையில் எண்கள் பொறிக்கப்பட உள்ளன. இந்திய வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஒருநாள் போட்டியில் தாங்கள் பயன்படுத்திய எண்களையே டெஸ்ட் சீருடையிலும் பயன்படுத்த உள்ளனர். இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு அவரது சாதனைக்கு மதிப்பளிக்கும் வகையில் அவருடைய சீருடையில் பயன்படுத்திய எண்ணுக்கு (10-ம் நம்பர்) இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமின்றி ஓய்வு கொடுத்து விட்டது. அந்த எண் யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெற்று விட்ட மூத்த விக்கெட் கீப்பர் டோனி குறுகிய வடிவிலான போட்டியில் பயன்படுத்தி வரும் சீருடை எண்ணையும் (7-ம் நம்பர்) இந்த டெஸ்ட் தொடரில் யாரும் உபயோகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது என்று தெரிகிறது.

* இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 37 வயதான நுவான் குலசேகரா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இவர் 184 ஒருநாள் போட்டியில் விளையாடி 199 விக்கெட்டும், 58 இருபது ஓவர் போட்டியில் ஆடி 66 விக்கெட்டும், 21 டெஸ்ட் போட்டியில் ஆடி 48 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.


Next Story