ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி
x
தினத்தந்தி 25 July 2019 12:10 AM GMT (Updated: 25 July 2019 12:26 AM GMT)

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

டோக்கியோ,

மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள சக நாட்டவரான பிரனாயை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். ஆனால் சரிவில் இருந்து மீண்ட பிரனாய் அடுத்த 2 செட்களையும் தனதாக்கி அசத்தினார். 59 நிமிடம் நடந்த இந்த மோதலில் பிரனாய் 13-21, 21-11, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீகாந்த் கடந்த வாரம் நடந்த இந்தோனேஷியா ஓபனில் 2-வது சுற்றிலேயே தோற்று வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சமீர் வர்மா 17-21, 12-21 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீரரான டென்மார்க்கின் அன்டோன்சென்னிடம் வீழ்ந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து 21-9, 21-17 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் யூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 37 நிமிடமே தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-16, 21-17 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லான்கிரிட்ஜ் இணையை வீழ்த்தியது.


Next Story