உலக கோப்பை கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா


உலக கோப்பை கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா
x
தினத்தந்தி 13 Sep 2019 11:49 PM GMT (Updated: 13 Sep 2019 11:49 PM GMT)

உலக கோப்பை கூடைப்பந்து போட்டி யில் ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

பீஜிங்,

18-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்தன.

திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 71 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக 5 நிமிடம் வழங்கப்பட்டது. முதல் கூடுதல் நேரம் முடிவிலும் இரு அணிகளும் சமநிலையில் (80-80) தான் இருந்தன.

இதனால் மேலும் 5 நிமிடம் கூடுதலாக அளிக்கப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ஸ்பெயின் அணி 95-88 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 2006-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணியில் 34 வயதான மார்க் காசோல் 33 புள்ளியும், ரிக்கி ருபியோ 19 புள்ளியும், செர்ஜியோ லுல் 17 புள்ளியும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே குறைந்த புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்த அர்ஜென்டினா அணி முடிவில் 80-66 என்ற புள்ளி கணக்கில் பிரான்சை சாய்த்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா அணியில் லூயிஸ் ஸ்கோலா 28 புள்ளியும், பிரான்ஸ் அணியில் இவான், பிராங்க் தலா 16 புள்ளியும் சேர்த்தனர்.

நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா மோதுகின்றன.

Next Story