பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா?


பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா?
x
தினத்தந்தி 2 Oct 2019 10:53 PM GMT (Updated: 2 Oct 2019 10:53 PM GMT)

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடங்க உள்ளது. அதில் மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உலன் உடே,

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் இன்று தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் 7-வது முறையாக மகுடம் சூடும் முனைப்புடன் களம் காணுகிறார். ஆனால் முந்தைய போட்டிகளில் மேரிகோம் 48 கிலோ பிரிவில் பிரமிக்க வைத்தார். ஆனால் அந்த பிரிவு ஒலிம்பிக் போட்டியில் இல்லாததால் மேரிகோம் இப்போது 51 கிலோ எடைப்பிரிவுக்கு மாறியுள்ளார். இந்த பிரிவு அவருக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் சாம்பியன் சரிதாதேவி மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவர்களை தவிர்த்து 5 வீராங்கனைகள் முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் கால் பதிக்கிறார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் விவரம் வருமாறு:- மஞ்சு ராணி (48 கிலோ), மேரிகோம் (51 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ), நீரஜ் (57 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), மஞ்சு போம்போரியா (64 கிலோ), லவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ), சவீத்தி பூரா (75 கிலோ), நந்தினி (81 கிலோ), கவிதா சாஹல் (81 கிலோவுக்கு மேல்)

இந்திய அணியின் பயிற்சியாளர் முகமது அலி கமார் கூறுகையில், ‘அனுபவமும் இளமையும் கலந்த அணியாக இந்தியா உள்ளது. கடந்த முறை உலக போட்டியில் நாம் 4 பதக்கங்களை வென்றோம். இந்த முறை அறிமுக வீராங்கனைகள் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்பதை பார்க்கலாம்’ என்றார்.


Next Story