ரிஷாப் பண்ட் பக்குவப்பட்ட வீரராக மாற இன்னும் அவருக்கு கால அவகாசம் தேவை - சவுரவ் கங்குலி


ரிஷாப் பண்ட் பக்குவப்பட்ட வீரராக மாற இன்னும் அவருக்கு கால அவகாசம் தேவை - சவுரவ் கங்குலி
x
தினத்தந்தி 8 Nov 2019 10:56 PM GMT (Updated: 8 Nov 2019 10:56 PM GMT)

ரிஷாப் பண்ட் பக்குவப்பட்ட வீரராக மாற இன்னும் அவருக்கு கால அவகாசம் தேவை என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


* ஊக்கமருந்து பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கிய மும்பை இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 15-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு அடுத்தநாளே அவர் சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மும்பை அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பாகிஸ்தானுக்கு எதிராக வருகிற 29, 30-ந்தேதிகளில் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வுக்கு தயாராக இருப்பதாக ஒற்றையர் பிரிவில் ஆடும் சுமித் நாகல், ராம்குமார் ஆகியோர் இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு ‘இ-மெயில்’ மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

* 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கியதால் போர்க்கொடி தூக்கிய இந்திய ஒலிம்பிக் சங்கம், காமன்வெல்த் போட்டியை புறக்கணிப்போம் என்று மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் 2 நாள் இந்திய பயணமாக வருகிற 13-ந்தேதி டெல்லிக்கு வருகை தரும் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் தலைமையிலான குழுவினர், இந்த பிரச்சினை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளனர். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவையும் சந்திக்க இருக்கிறார்கள்.

* அயர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றிய 35 வயதான வில்லியம் போர்ட்டர்பீல்டு அந்த பதவியில் இருந்து நேற்று விலகினார். கேப்டன் பதவியை துறந்தாலும், ஒரு வீரராக தொடர விரும்புவதாக கூறியிருக்கிறார். இதையடுத்து அயர்லாந்து அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான புதிய கேப்டனாக 28 வயதான பேட்ஸ்மேன் ஆன்ட்ரூ பால்பிர்னி நியமிக்கப்பட்டு உள்ளார். 20 ஓவர் அணியின் கேப்டனாக கேரி வில்சன் தொடருவார்.

* 14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் தகுதி சுற்றில் 588 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் 116 புள்ளிகள் எடுத்த அவர் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 11-வது கோட்டா இதுவாகும்.

* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அற்புதமான ஒரு வீரர். பக்குவப்பட்ட வீரராக மாறுவதற்கு இன்னும் அவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். நிச்சயம் சிறந்த வீரராக உருவெடுப்பார்’ என்றார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சியில் நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா எப்.சி. இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- ஜாம்ஷெட்பூர் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story