2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் இன்று தொடக்கம்


2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 30 Nov 2019 10:45 PM GMT (Updated: 30 Nov 2019 7:09 PM GMT)

2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் இன்று தொடங்குகிறது.

காத்மண்டு, 

தெற்காசிய விளையாட்டு போட்டி 1984-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள கவுகாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங்கில் (மேகாலயா) அரங்கேறியது.

இந்த நிலையில் 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹரா ஆகிய நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா காத்மண்டில் இன்று நடக்கிறது. ஏற்கனவே சில போட்டிகள் தொடங்கிவிட்டன.

இந்த தெற்காசிய போட்டியில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதில் வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கபடி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், மல்யுத்தம், கராத்தே, ஆக்கி, கால்பந்து உள்பட 26 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. 319 தங்கம் உள்பட 1,119 பதக்கங்கள் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தெற்காசிய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர் குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங் தலைமையில் தேசிய கொடியேந்தி தொடக்க விழா அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா தான் வலுவான அணி என்பதால் வழக்கம் போல் பதக்கங்களை வென்று குவித்து முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது.

Next Story