கொரோனா வைரஸ் பீதி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - போட்டி அமைப்பாளர்கள் மீண்டும் உறுதி


கொரோனா வைரஸ் பீதி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - போட்டி அமைப்பாளர்கள் மீண்டும் உறுதி
x
தினத்தந்தி 26 Feb 2020 11:53 PM GMT (Updated: 26 Feb 2020 11:53 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் மீண்டும் உறுதியளித்துள்ளனர்.

டோக்கியோ,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடிஜெனீரோவில் இந்த போட்டி நடைபெற்றது. 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பேச்சு கிளம்பி இருக்கிறது. இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி தோஷிரோ முடோ கருத்து தெரிவிக்கையில், ‘ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ எந்தவித திட்டமும் இல்லை. அது குறித்து நாங்கள் சிந்திக்கவும் இல்லை. எங்களிடம் இது குறித்து நிறைய பேர் கேட்டார்கள். அவர்களிடம் நாங்கள் அப்படி எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தோம். ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது தான் எங்கள் நோக்கமாகும்’ என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.


Next Story