டோனி எனக்கு ஒரு சிறந்த ஆலோசகர் - ரிஷாப் பண்ட்


டோனி எனக்கு ஒரு சிறந்த ஆலோசகர் - ரிஷாப் பண்ட்
x
தினத்தந்தி 2 May 2020 11:15 PM GMT (Updated: 2 May 2020 7:17 PM GMT)

கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார் என ரிஷாப் பண்ட் தெரிவித்துள்ளார்.


* வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான பிரையன் லாரா நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் குவித்து (2004-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 400 ரன்கள்) உலக சாதனையாளராக விளங்கும் லாராவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அத்துடன் 1996-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் லாரா சதம் அடித்த இன்னிங்ஸ் வீடியோவையும் பிறந்த நாள் பரிசாக வெளியிட்டுள்ளது. பிறந்த நாளையொட்டி லாராவுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்டின் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஹர்பஜன்சிங், லோகேஷ் ராகுல், யுவராஜ்சிங் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வாழ்த்தை பகிர்ந்துள்ளனர்.

* இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷாப் பண்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார். எந்தவொரு பிரச்சினையை நான் சந்தித்தாலும், அவரை எளிதில் அணுகலாம். பிரச்சினைக்கு முழுமையான தீர்வை அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். ஏனெனில் நாம் முழுமையாக அவரை சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைப்பார். பிரச்ச்சினையை சரி செய்தவற்கான குறிப்புகளை மட்டும் கூறுவார். அது நாம் பிரச்சினையை தீர்க்க உதவிகரமாக இருக்கும். அவர் எனக்கு மிகவும் பிடித்தமான பேட்டிங் இணை ஆவார். அவர் களத்தில் இருக்கையில், நிலைமைக்கு தகுந்தபடி விளையாடுவது குறித்த திட்டத்தை தெளிவாக வைத்து இருப்பார். அந்த திட்டத்தை நாம் பின்பற்றினால் போதுமானதாகும்’ என்று கூறியுள்ளார்.

* இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பில், ஊரடங்கு நேரத்தில் உதவி தேவைப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா கருத்து தெரிவிக்கையில், ‘முன்னாள் வீரர்களுக்கு உதவுவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இதுவரை ரூ.39 லட்சம் திரட்டி இருக்கிறது. எங்களின் இந்த முயற்சியில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், குண்டப்பா விஸ்வநாத், கவுதம் கம்பீர் ஆகியோர் இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய ஊக்கம் அளித்துள்ளது. வேலை இல்லாத மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து ஓய்வூதியம் பெறாத முன்னாள் வீரர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்’ என்றார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமணனின் பேட்டிங் நுணுக்கத்தை முறியடிக்க மிகவும் கடினமாக இருந்தது. அவரது பேட்டிங் நுணுக்கம் அழகாக இருந்தது. அவர் எந்தவிதமான பந்துவீச்சை கண்டும் அஞ்சாமல் செயல்பட்டார். அவர் பேட்டிங்கின் போது காலை அருமையாக நகர்த்தி விளையாடும் ஆற்றல் படைத்தவர்’ என்று தெரிவித்தார்.

Next Story